(ஆர்.ராம்)
13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவது தொடர்பாக கொள்கைத் தீர்மானங்கள் எதனையும் எமது பாராளுமன்றக் குழு எடுக்கவில்லை என்று பிராந்திய உறவுகள், நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சுயாதீத்துவம் கேள்விக்குறியவதாகவும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு உட்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கும் ஆளும் தரப்பின் பிரதிநிதிகள் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவது பிராந்திய உறவுகளில் எவ்விதமான தாக்கத்தினை செலுத்தும் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பாராளுமன்றக் குழுவிலேயே அதிகமான கொள்கைத் தீர்மானங்கள் எடுப்பது வழமையாக இருக்கின்றது. அந்த வகையில் இதுவரையில் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்றே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
மேலும் இந்த விடயத்தில் எமது தரப்பில் சிறு குழுவினரே அவ்விதமான நிலைப்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே இது அரசாங்கத்தின் அயல் நாடுகளுடனான உறவுடன் சம்பந்தப்பட்ட விடயமொன்றாகின்றது.
அதேவேளை, சிலருடைய தவறான கணிப்பாக காணப்படுவது என்னவென்றால், மாகாண சபை முறைமையை ஒழிக்கின்றபோது நிதி விரயமாகாது என்பதாகும். உண்மையில் அவ்வாறானதொரு நிலைமை இருக்காது என்பதே யதார்த்தமாகும்.
உதாரணமாக கூறுவதாயின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கி, மாகாண முறைமையை ஒழிப்பதன் மூலம் மாகாண அதிகாரத்திற்கு உட்பட்ட பாடசாலைகளையோ, வைத்திய நிலையங்களையே நிரந்தரமாக மூடிவிட முடியாதல்லவா? ஊழியர்களை வெளியேற்றி விடமுடியாதல்லவா? அதேநேரம், நான் மாகாண சபையின் ஊடாகவே அரசியலில் பிரவேசித்தேன். அதனடிப்படையில் மாகாண சபை முறைமை தொடர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
அத்துடன், மத்திய அரசாங்கமா, மாகாண அரசா என்பதற்கு அப்பால் வினைத்திறனான செயற்பாடுகள் நடைபெறுகின்றதா என்பதிலேயே நாம் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தினை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மத்திய அரசாங்கத்தினாலும், செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. மாகாண அரசாலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீளத் திருப்புமளவிற்கு செயற்பாட்டு ரீதியான நிலைமைகள் மோசமாக இருந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். ஆகவே இங்கு அதிகார கட்டமைப்புக்களை மாற்றுவதை விடவும் வினைத்திறனான செயற்பாட்டு பொறிமுறை தொடர்பிலேயே அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment