(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட உயர்வான வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளமையானது இலங்கை மக்களின் செயற்திறன் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான அவர்களின் பற்றுறுதி என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.
கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் தெற்காசிய நாடுகளில் தேசிய ரீதியில் நடைபெறும் முதலாவது பெரிய தேர்தலாக இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று புதன்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று முடிந்தது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலையையடுத்து நாடு முற்றிலுமாக முடக்கப்பட்டது.
இதன் காரணமாக பொதுத் தேர்தல் பிற்போடப்பட்ட நிலையிலேயே, நேற்று நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றித் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் 2020 ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றது. மிகவும் நெருக்கடியானதொரு சூழ்நிலையிலும் கூட உயர்வான வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளமையானது, இலங்கை மக்களின் செயற்திறன் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான அவர்களின் பற்றுறுதி என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.
No comments:
Post a Comment