தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எனது வெற்றியின் ஊடாக மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் - அமைச்சர் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எனது வெற்றியின் ஊடாக மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் - அமைச்சர் வியாழேந்திரன்

இனி தமிழர்களுக்கு பொற்காலம்தான் ...
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் தரப்பான இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்ற ஒரேயொரு தமிழ் வேட்பாளராக நான் இருக்கின்றேன் என்று தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், எனது வெற்றியென்பது ஒரு சாதாரண வெற்றியில்லை. ஏனென்றால், வட கிழக்கில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கு உரிமையும் பெற்றுக் கொடுக்காமல், அபிவிருத்திகளையும் பெற்றுக் கொடுக்காமல், தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்காமல் தொடர்ந்தேர்ச்சியாக பல தசாப்தங்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எனது வெற்றியின் ஊடாக மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

நானும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் வழியில் சென்றவன்தான் அந்தக் கட்சியில் 2015 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்குகளை நான் பெற்றிருந்தேன். ஆனால் எங்களுக்கு வாக்களித்து எங்களை நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு அந்த மக்கள் எதிர்பார்த்த தீர்வையோ, அபிவிருத்தியையோ அந்தக் கட்சி ஊடாக எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை வெறுமனே அரசாங்கத்தை பாதுகாத்தது ஒன்றுதான் மிச்சம்.

அதனால் அந்த வழி பிழையான வழி என்பதனை உணர்ந்து ஆளும் தரப்போடு சில நிபந்தனைகளை, ஒப்பந்தங்களை நாங்கள் முன்வைத்து கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே ஆதரவு அளித்தோம். அதன் பிரகாரம் வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவுடனும் நாடிலுள்ள பெரும்பான்மை மக்களின் ஆதரவுகளுடனும் கோட்டபாய ராஜபக்ஷ் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு கிழக்கு மாகாணத்தில் எங்களுடைய அரசியல் பயணத்தை ஒரு தனித்துவமான பாதையில் கட்டியெழுப்பினோம்.

எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் வரலாற்று பின்னணியைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட அரசியல் கட்சிகளோடு போட்டியிட்டு நாங்கள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.

அத்தோடு, எங்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதி இல்லை என்று அம்பாறை தமிழ் மக்களுக்கு ஒரு கவலை இருக்கிறது. அவர்களுக்கு ஒரு செய்தியை நான் இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் எப்பொழுதுமே அம்பாறை, மட்டக்களப்பு திருகோனமலை என்று நாங்கள் பிரித்துப் பேசியதே இல்லை. அம்பாறை, திருகோணமலை தமிழ் மக்களுக்காக நான் இருபத்தி நான்கு மணித்தியாலமும் என்னுடைய உயிரையும் கொடுத்து சேவையாற்ற தயாராக இருக்கின்றேன் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்புக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் நான் சேவையாற்றுவேன் நீண்ட காலமாக கிழக்கில் புரையோடிக் காணப்படுகின்ற எமது மக்களுக்குரிய பிரச்சினைகளை இந்த நாட்டிலுள்ள அமைச்சுக்களின் உதவியுடன் நான் சேவையாற்ற தயாராகவுள்ளேன்.

இந்த அரசியல் பயணத்தில் இந்தப் பொறுப்பை நாங்கள் கண்ணியமாகவும், கெளரவமாகவும் பாதுகாக்க வேண்டும். இது மக்கள் எங்களுக்குத் தந்த பிச்சையாகத்தான் நான் பார்க்கின்றேன். நிச்சயமாக நாகரிகமான, பண்பான ஒரு அரசியல் கலாச்சாரத்தை இந்த மாகாணத்தில் கட்டியெழுப்பி மக்களுக்கு நல்ல சேவையாளர்களாக நாங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் சாதித்தது போன்று வருகின்ற காலங்களில் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் சரியான கட்டமைப்புக்களை உருவாக்கி அந்த மட்டங்களிலும் நாங்கள் சேவைகளை செய்ய திட்டங்களை போட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment