முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக உழைப்பதே எனது பிரதான இலக்காகும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி சமூகத்தின் கல்வித்துறை எழுச்சிக்காக என்னால் முடியுமான அனைத்தையும் செய்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலை கௌரவிக்கும் நிகழ்வு பேருவளை மாளிகாசேனை நபவியா மண்டபத்தில் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய செய்கு நாயகம் அஷ்ஷெய்க் அஹமத் பின் முஹம்மத் ஆலிமின் வழிகாட்டலின் கீழ் நபவிய்யா ஊடக மையம் மற்றும் நூன்கல்வி நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
சட்டத்தரணி பைரூஸ் மரிக்கார் வரவேற்புரை நிகழ்த்திய இன்நிகழ்வில் செய்கு நாயகத்தின் வாழ்த்துச் செய்தியும் ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எச்.எம்.முபாரக்கினால் வாசிக்கப்பட்டது.
அவர் மேலும் கூறியதாவது, நான் ஒரு சேவகனாகவே இருந்து மக்களுக்கு சேவையாற்றுவேன். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூகத்தின் எழுச்சிக்காக என்றும் பாடுபடுவேன்.
காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய செய்கு நாயகம் அஷ்ஷெய்க் அஹமத்பின் முஹம்மத் ஆலிமின் வழிகாட்டலின் கீழ் நான் மக்களுக்கான சமுதாய பணிகளை மேற்கொள்வேன். சங்கைக்குரிய செய்கு நாயகம் எமக்கு என்றும் நல்ல புத்திமதிகளையும் சிறந்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
அல்லாஹ்வின் உதவியும் செய்கு நாயகத்தின் துஆ பிரார்த்தனையும் மக்களின் ஒத்துழைப்பின் காரணமாகவே எனக்கு இப்பதவி கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment