பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே என்னை தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது : சுரேன் ராகவன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே என்னை தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது : சுரேன் ராகவன் எம்.பி.

வடக்கு மக்களுக்கு ஆளுநர் சுரேன் ...
(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியலில் என்னை உள்வாங்குமாறு நான் யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவுமில்லை, கோரிக்கையும் விடுக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட குழுவே என்னை தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்தது. இவ்வாறான நிலையில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மீண்டும் மீண்டும் இந்த விடயம் குறித்து தனது விசனத்தை வெளியிடுகின்றமை பிரயோசனமற்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

தேசிய பட்டியலுக்காக சுதந்திர கட்சி பரிந்துரைத்த உறுப்பினர்களில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரை புறக்கணித்து சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்குள் நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவே தேசிய பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்தது. 

29 தேசிய பட்டியல் ஆசனங்களுக்காக சுதந்திர கட்சியில் மூவரின் பெயர்கள் பொதுஜன பெரமுனவிடம் வழங்கப்பட்டிருந்தன. அதில் ஆரம்பத்திலிலேயே ஒருவரது பெயர் பொதுஜன பெரமுனவால் நீக்கப்பட்டது. எனவே இரு பெயர்களே எஞ்சியிருந்தன.

தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் பொதுஜன பெரமுனவிற்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்களே கிடைத்தன. அதற்கமைய அந்த கட்சி சுதந்திர கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவரை மாத்திரமே தெரிவு செய்தது. அந்த ஒரு தெரிவாக நான் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச சில சந்தர்ப்பங்களில் இது குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி முதலாவது பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்தவுடன் அன்றையதினம் மாலை சுதந்திர கட்சியின் செயற்குழு, மத்திய குழு மற்றும் அரசியல் குழு என்பன கூடின. இதன் போது கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன, 'சுரேன் ராகவன் உத்தியோகபூர்வமாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே இது குறித்து அநாவசியமான கருத்துக்களை வெளியிடுவது பிரயோசனமற்றது.' என்பதை அனைவரிடமும் தெரிவித்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேன கூறிய அதேவிடயமே எனது நிலைப்பாடுமாகும். குறித்தவொரு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் செயலாளருக்கே காணப்படுகிறது. பொதுஜன பெரமுன என்ற பிரதான கட்சியின் தலைமைத்துவத்தில் எமது கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அந்த கட்சியின் உயர்மட்ட குழுவிற்கே காணப்பட்டது. அதற்கமைய அவர்கள் என்னை தெரிவு செய்திருக்கின்றார்கள்.

உத்தியோகபூர்வமாக நடந்து முடிந்த ஒரு விடயம் பற்றி தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால் எவ்வித பிரயோசனமும் கிடையாது. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர என்ன நோக்கத்தில் இவ்வாறு செயற்படுகின்றார் என்பது எனக்கு புரியவில்லை. இது போன்ற தனிப்பட்ட கருத்துக்கள் ஒருபோதும் உத்தியோகபூர்வமானவையாகாது என்றார்.

No comments:

Post a Comment