
(எம்.ஆர்.எம்.வஸீம்)
தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்டம் இயற்றுவதற்காக பாராளுமன்றத்துக்கு செல்ல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்கள் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
குறிப்பாக வேட்பாளர்களுக்கு தங்களது விருப்பு இலக்கத்தை காட்சிப்படுத்த போதுமான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. கொரோனா தொற்று அச்சத்துக்கு மத்தியில் இந்த விடயங்களை கடந்த காலங்களிலும் பார்க்க தெளிவாக உணர்ந்துகொள்ள முடியுமாக இருந்தன.
அத்துடன் தேர்தல் சட்டங்கள் மிகவும் இருக்கமாக இருக்கின்றபடியால் வசதி குறைந்த வேட்பாளர்களுக்கு ஒருசில சந்தர்ப்பங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
வசதிபடைத்தவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து ஊடகங்கள் ஊடாகவும் வேறு வழிகளிலும் தங்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த முடியுமாக இருந்தபோதும் வசதி குறைந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. அதனால் வேட்பாளர்களுக்கு மத்தியில் சமமான பிரசார வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகின்றது.
அதேபோன்று இந்தமுறை தேர்தல் சட்டமீறல்கள் சமூகவலைத்தளங்கள் ஊடாகவே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக 4,400 முறைப்பாடுகள் முகப்புத்தகத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் சமூகவலைத்தலங்களை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோன்று வேட்பாளர் ஒருவர் எந்தளவு தொகை செலவழிக்கலாம் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும். இதன் மூலமே கோடிக்காணக்கான ரூபாக்கள் வீணாகுவதை கட்டுப்படுத்த முடியுமாகின்றது.
அதனால் 9 ஆவது பாராளுமன்றம் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டத்தை மாற்றியமைக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment