(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பொறுப்பேற்றால் அவருடைய நற்பெயருக்கு ஆபத்து ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்போவதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தலைமைத்துவத்தை அவர் ஏற்றுக் கொண்டால் அவருடைய நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும்.
பொதுத் தேர்தல் முடிவுகளின் ஊடாக மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பு யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை தெரிவித்துள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி புதிதாக பிறந்த சிசுவைப் போன்றே தனது பயணத்தை ஆரம்பித்தது. இருந்தும் மக்கள் 54 ஆசனங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல பொறுப்புகள் கையளிக்கப்பட வேண்டி உள்ளன. அவற்றை பொறுப்பளிப்பதோடு, கட்சியின் கொள்கைத்திட்டம், மத்திய செயற்குழு, தொழிற்சங்க அமைப்புகள் என்பன ஸ்தாபிக்கப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பிலே தற்போது கட்சிக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. அதற்கமைய எதிர்வரும் மாதங்களில் எமது கட்சியின் கொள்கைத் திட்டத்தை முழுமையாக சமர்ப்பிப்போம்.
வங்குரோத்து நிலையை அடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஊண்டுகோலாக மாறுவதற்கு கரு ஜயசூரிய முயற்சித்தால், அவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும்.
மக்கள் தெளிவாக அவர்களது தீர்மானத்தை தெரிவித்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு கட்சிக்குள் உள்ள பழைமையான தலைவரை தெரிவுசெய்ய கட்சிக்குள் இருக்கும் சிலர் முயற்சிக்கின்றனர். இது பெரும் கவலைக்குறிய விடயமாகும்.
No comments:
Post a Comment