
(எம்.மனோசித்ரா)
தேசிய புலனாய்வு பிரிவு தகவல்களின் பிரகாரம் ஆளும் கட்சி 60 வீதமான வெற்றியினை பொதுத் தேர்தலில் ஈட்டும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதில் சிறியளவில் வித்தியாசம் காணப்படும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இவ்வாறானதொரு பாரிய வெற்றிக்கு வாய்ப்பாகியுள்ளதாகவும் கனக ஹேராத் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் சனிக்கிழமை கேகாலை நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த கட்சியின் உறுப்பினரும் வேட்பாளருமான கனக ஹேராத் இந்த விடயத்தை குறிப்பிட்டார் .
அவர் தொடர்ந்தும் கூறுகையில், எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள 2020 பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி 60 வீதமான வெற்றியை ஈட்டும். இதனை தேசிய புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது. ஆனால் 65 வீதத்தை தாண்டினால் மாத்திரமே தனி பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதி கோத்தாபயவின் திட்டங்கள் மற்றும் அவரது தீர்மானங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே எமது வெற்றி இலக்கை அடைவது கடினமான விடயமல்ல. கேகாலை மாவட்டத்தை பொறுத்த வரையில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இங்கு வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை. அனைத்து இன மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே அரசாங்கத்தின் திட்டங்கள் அமைந்துள்ளது.
அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் நாங்கள் முழு அளவில் செயற்பட்டுள்ளோம். இளையோருக்கான தொழில் வாய்ப்புகள் அடுத்து வரும் எமது ஆட்சியில் அதிகமாக உருவாக்கப்படும். அதற்கு ஏற்ப நவீன தொழில் நுட்ப பயிற்சிகளும் பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment