சுய தனிமைப்படுத்தலில் உள்ளோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இம்முறை இடம்பெறும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருப்பவர்களுக்கு வாக்களிப்பதற்காக ஜூலை 31 இல் வாய்ப்பு வழங்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை ஜூலை 04ஆம் திகதி நடத்த ஏற்கனவே கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடனான கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், 04 ஆம் திகதி அதனை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றது. ஏனெனில், வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை 04 ஆம் திகதி ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லவுள்ளதால், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதியே நடத்த தற்போது தீர்மானித்துள்ளோம்.
எவரேனும் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் 31 ஆம் திகதி அவர்கள் தமது வாக்கினை பதிவு செய்ய முடியும். குறித்த பகுதிகளில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அரசியல் கட்சிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ள வாக்காளர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் மற்றும் அவர்களது புகைப்படங்களை ஊடகங்கள் வெளிப்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment