ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா தொழிற்சாலை பிரிவு தோட்டத்தில் பிரசவித்த சிசுவை வீட்டு தோட்டத்தில் புதைத்த தாய் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு குறித்த சிசுவின் சடலம் ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் கீழ் நேற்று (22) மாலை 3.00 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருமணமான குறித்த பெண் 40 வயது மதிக்கத்தக்கவர் என்றும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் இவர் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி மீண்டும் தன் வீட்டுக்கு வந்துள்ளததாகவும், கொழும்பில் இருக்கும் போது ஏற்பட்ட தகாத தொடர்பு காரணமாக தான் கர்ப்பமடைந்ததாகவும், கடந்த 7 ஆம் திகதி கரு கலைந்து இறந்து பிறந்ததனால் கருவினை தோட்டத்தில் புதைத்ததாகவும் குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது சந்தேகநபரான பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மலையக நிருபர் சுந்தரலிங்கம்
No comments:
Post a Comment