ஜனாதிபதிக்கு பொருத்தமான அணியை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் பொறுப்பு வாக்காளர்களுக்கே இருக்கின்றது : சுசில் பிரேம்ஜயந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

ஜனாதிபதிக்கு பொருத்தமான அணியை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் பொறுப்பு வாக்காளர்களுக்கே இருக்கின்றது : சுசில் பிரேம்ஜயந்த

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ...
(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதிக்கு பொருத்தமான அணியை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் பொறுப்பு வாக்காளர்களுக்கே இருக்கின்றது. மக்கள் சிந்தித்து அவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு நிகழ்வு நேற்று கொழும்பு மருதானையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலிலும் பார்க்க இந்த தேர்தலில் மத்திய கொழும்பில் பாரிய மாற்றத்தை காண்கின்றோம். ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதன் மூலமே தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதை தற்போது அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். கொழும்பு மாநகரில் மொத்த வாக்குகளில் தமிழ், முஸ்லிம் வாக்குகளே அதிகம் இருக்கின்றது.

மேலும் கொழும்பு மாநகரை பொறுத்தவரை மூன்று இன மக்களும் இணைந்து வாழும் பிரதேசமாகும். மத்திய கொழும்பில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். வட கொழும்பில் தமிழர் பெரும்பான்மையாக இருக்கின்றனர். கொழும்பு மேற்கில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்றனர்.

அதனால் கொழும்பு மாநகருக்கு இனவாத தலைவர்கள் சரிவராது. அனைத்து இன மக்களையும் அரவணைத்துக் கொண்டு செயற்படும் ஒருவரே இருக்க வேண்டும். 1995 இல் மேல் மாகாண முதலமைச்சராக நான் இருந்த காலத்தில் கொழும்பு மாநகர சபை மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து தேவைகளையும் மேற்கொண்டிருக்கின்றேன்.

அத்துடன் இந்த முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டு போட்டியிடுகின்றது. அதன் பலனை நாங்கள் அடைந்துகொள்ள வேண்டும். எமது வாக்கு வங்கிக்கு மேலும் 30 ஆயிரம் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் மேலதிகமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எமக்கு பெற்றுக் கொள்ள முடியும். அதனால் கொழும்பு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

மேலும் நாட்டில் ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம். தற்போது ஜனாதிபதியின் கொள்கை திட்டத்தை அமுல்படுத்த தேவையான உறுதிமிக்க அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பாராளுமன்றத்தை அமைத்துக் கொள்ளவே இந்த தேர்தல் இடம்பெறுகின்றது.

அதனால் ஜனாதிபதிக்கு பொருத்தமான அணியை தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பும் பொறுப்பு மக்களிடமே இருக்கின்றது. ஜனாதிபதி ஒரு கட்சியில் இருக்கும் நிலையில், சஜித் பிரேமதாசவோ ரணில் விக்ரமசிங்கவோ பிரதமராகுவதால் பிரயோசனம் இல்லை. அது ஏற்படப்போவதுமில்லை என்றார்.

No comments:

Post a Comment