பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில் விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 7, 2020

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில் விக்ரமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே முன்னேற்ற முடியும். பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்புவதற்கு 6000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம். அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களினால் நெருக்கடி காலத்தில் கிடைக்கவிருந்த சர்வதேச நிதிகள் கிடைக்கப் பெறவில்லை என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிலியந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அரசாங்கம் கோரியிருந்த நிதி குறித்து ஜப்பான் நாட்டின் ஜய்கா நிதி நிறுவனம் இலஙகையின் பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மிகவும் அவதானமாக இருப்பதாக மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்வித கருத்தினையும் மீள தெரிவிக்கவில்லை.

தற்போதைய அவசரகால நிலையில் சர்வதேச நாணய நிதியம் நேபாளம், பங்களாதேஷ், பாக்கிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. நிதியுதவினை பெற்றுக்கொள்ள அரசாங்கம் விண்ணப்பித்திருந்த நிலையில் எவ்வித நிதியும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. முறையான அணுகுமுறையினை அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து செயற்படுத்திருந்தால் 800 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொண்டிருக்கலாம்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக வங்கி வழங்கிய 180 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய 20 மில்லியன் நிதிக்கும் என்னவாயிற்று என்பது குறித்து அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை. இவ்வருட இறுதியில் அரச முறைகடன் தவணையில் 5000ம் மில்லியன் டொலர்களை மீள் செலுத்த வேண்டும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள்கட்டியெழுப்ப 6000 மில்லியன் அவசியம். 

ஆகவே இவ்வாறான நிலையில் ஐக்கி தேசிய கட்சியால் மாத்திரமே நெருக்கடியை வெற்றிகொள்ள முடியும். பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே முடியும் என்றார்.

No comments:

Post a Comment