தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்

தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல என்றும் நாங்கள் நாங்களாக இருந்து கொண்டு எமது அரசியல் பலத்தினூடாக எம்முடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அணுகின்ற பொறிமுறை என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் எமக்கு கணிசமான அரசியல் பலம் கிடைக்காமையினால் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள், முன்னணி செயற்பாட்டாளர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இதனைத் தெரிவித்தார்.

திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சுவர்கா விருந்தினர் விடுதியில் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களையும், சமூக இடைவெளி என்பவற்றையும் அனுசரித்து நடைபெற்ற குறித்த கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கணிசமான வாக்குகளும் கணிசமான ஆசனங்களும் கிடைத்தால் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்துடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூட்டமைப்பினர் அண்மைக் காலமாக தெரிவித்து வருகின்றமையை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பினர் முன்னரே மேற்கொண்டிருந்தால் பல அழிவுகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம் எனவும் தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிழக்கு பிராந்திய அமைப்பாளரும் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான எம்.ஐ. ஸ்ராலின் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் த.புஸ்பராசா ஆகியோர் கலந்து கொண்ட இன்றைய கலந்துரையாடலில், எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment