(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கம் கைச்சாத்திட முற்பட்ட எம்.சி.சி மற்றும் சோபா ஆகிய ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தற்போது அமெரிக்காவில் சிவில் மக்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொள்கின்ற வன்முறை அடங்கிய எதேர்ச்சதிகார போக்கினையே எமது நாடும் எதிர்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டிருக்கும். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளுக்கு ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில். அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்காவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் சிவில் சமூகத்துக்கு எதிரானதாகும். இனவாதத்தை தோற்றுவிக்கும் வன்முறைகளை அரச அதிகாரிகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றமை கவலைக்குரியது.
நல்லாட்சி அரசாங்கம் எம்.சி.சி மற்றும் சோபா ஆகிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட பாரிய முயற்சிகளை மேற்கொண்டது. இவர்களின் நோக்கம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நாட்டில் அமெரிக்க இராணுவத்தினரது செயற்பாடுகள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.
எம்.சி.சி ஒப்பந்தத்தின் 6.8 பிரிவில் அமெரிக்க இராணுவத்தினர், அதிகாரிகள் இலங்கையில் ஏதேனும் சிவில் குற்றங்களை புரிந்தால் இலங்கையின் நீதிதுறையின் பிரகாரம் அவருக்கு தண்டனை வழங்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சாதகமான விடயங்கள் எதேர்ச்சதிகார செயற்பாடுகளுக்கு வழி வகுக்கும். இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட பொதுஜன பெரமுனவினர் தடையாக இருந்ததன் காரணத்தை தற்போது அமெரிக்காவில் இடம்பெறும் மிலேட்சத்தனமான செயற்பாடுகளின் ஊடாக மக்கள் புரிந்துகொள்ள முடியும்.
நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது பி.சி.ஆர். பரிசோதனையை புறக்கணித்த அமெரிக்க இராஜதந்திரி வியன்னா ஒப்பந்தம் ஊடாக வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை காரணம் காட்டுகிறார்.
எம்.சி.சி. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் அமெரிக்க இராணுவத்தினர் நாட்டுக்குள் எதேர்ச்சதிகாரமாக செயற்படுவார்கள் இவ்வாறான செயற்பாடுகள் பாரிய விளைவை ஏற்படுத்தும் என்றார்.

No comments:
Post a Comment