"ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும்´´ என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சி.பீ. ரத்னாயக்க தெரிவித்தார்.
பூண்டுலோயா கலப்பிட்டிய பகுதியில் இன்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதேபோல் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தே கூடுதலான உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றம் செல்வார்கள். அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் நிச்சயம் பெறுவோம்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. எனவே, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர்.
அதேவேளை, எம்.சி.சி. விவகாரத்தை நல்லாட்சி எனக் கூறிக்கொண்ட அரசாங்கமே கையாண்டது. அதன்பின்புலம் தொடர்பில் எமக்கு தெரியாது. ஆனால், நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்" என்றும் சி.பீ. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மலையக நிருபர் கிரிஷாந்தன்
No comments:
Post a Comment