(செ.தேன்மொழி)
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் தேர்தல் இலாபம் கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகரத்தை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது. இதனால் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருமே தொற்று நீக்கம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுகையில் இவர்களது செயற்பாடு நாட்டு மக்கள் அனைவருக்குமே சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை நிறைவேற்றுபவர்களே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், சிறிகொதாவில் ஐக்கிய தேசிய கட்சியிடம் கட்டிடம் மாத்திரமே இருக்கின்றது. கட்சியின் அதிகளவான ஆதரவாளர்கள் எங்கு இருக்கின்றார்களோ அங்கே உண்மையான ஐக்கிய தேசிய கட்சி இயங்குகின்றது. அதனால் உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினர் நாங்களே என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான கொள்கையைக் கொண்டவர்களே சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.
தாங்களே ஐக்கிய தேசியக் கட்சி என்று கூறிக் கொள்ளும் தரப்பினரிடம் கட்டிடம் மாத்திரமே இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி என்பது அதன் ஆதரவாளர்கள் எங்கு இருக்கின்றார்களோ அங்குதான் செயற்படுகின்றது. தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே இணைந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி என்று கூறிக் கொள்பவர்களுக்கு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலிருந்தும் 10 ஆதரவாளர்கள் கூட கிடைக்க மாட்டார்கள். ஆனால் எம்முடன் பலகணக்கான ஆதரவாளர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஐக்கிய தேசிய கட்சி தரப்பினர் எமக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சமை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் அளித்து வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கின்றன. இந்த குழுவினரால் எமது ஆதரவாளர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு கட்சியல்ல, மாபெரும் சக்தி இந்நிலையில் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் உறுப்புரிமை மற்றும் பதவியை பாதுகாப்பதற்காக நாங்கள் ஒருபோதும் பின்வாங்காமல் முன்னிற்போம்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் தேர்தல் இலாபம் கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காமல் அவர்களது அதிகரத்தை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது. இதனால் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர்.
நாட்டு மக்கள் அனைவருமே தொற்று நீக்கம் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுகையில் இவர்களது செயற்பாடு நாட்டு மக்கள் அனைவருக்குமே சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு எதிர்கட்சிக்குரிய பொறுப்புகளை யார் நிறைவேற்றுகின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடனே இருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment