இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப் பதவி குறித்த சர்ச்சை காணப்படுகிறது எனவும் அதன் மூலம் கட்சி பிளவுபடும் என சிலர் பகல் கனவு கண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களது இக்கனவு ஒருபோதும் நிறைவேறாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி செயலாளரும் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அடுத்த தலைவர் யார் என்பதில் பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்பு உள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக துணிச்சலுடன் போராடும் உயரிய எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கமாகும். எனவே அக்கட்சியில் தலைமைப் பதவிக்கு அல்லது வேறு எந்த பதவிக்கும் போட்டி என்று எந்த சந்தர்ப்பத்திலும் சர்ச்சை உருவானது கிடையாது. தக்க நேரத்தில் கட்சியின் உயர்பீடம் கூடி தலைமையை தெரிவு செய்வார்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரான எனது தந்தை மறைந்து ஓரிரு நாட்களேயாகும் நிலையில் எமது கட்சித் தொண்டர்கள், உறுப்பினர்களுக்கு இல்லாத அக்கறை வெளியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் உள்ள எவரும் பதவி ஆசை கிடையாது. அத்தகைய வரலாறும் காங்கிரஸூக்கு கிடையாது. சங்க உறுப்பினர்களுக்கு கிடையாத அக்கறையை எவரும் தமதாக்கிக் கொள்ளதேவையில்லை. கட்சி உயர் மட்டக் குழு புதிய தலைவரை விரைவில் தெரிவுசெய்யும் என்றார்.

No comments:
Post a Comment