கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழுமையாக முடங்கியிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து மீளவும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறையின் ஊடாகப் பெருமளவு வருமானம் ஈட்டப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் அது முற்றாக முடங்கியது. இந்நிலையிலேயே சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மீளவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆரம்பிக்கவிருப்பதாக கிமாலி பெர்னாண்டோ ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தகவல் வழங்கியிருக்கிறார்.
அதன்படி உயர் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, உலகலாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட சிறிய குழுக்களை முதலில் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும், நிர்ணயிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விடுதிகளில் முறையான பாதுகாப்பு வரையறைகளைப் பின்பற்றி அவர்களைத் தங்க அனுமதிப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் கூறியிருக்கிறார்.
நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை யால தேசிய பூங்கா, உடவளவை, அறுகம்பே, திருகோணமலை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட சில கடற்கரைகளுக்கு செல்வதற்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவிருக்கிறது. மேலும் இம்மாத நடுப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்கவிருப்பதாக வெளியான செய்திகளை அவர் மறுத்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
No comments:
Post a Comment