ஜனாதிபதியின் போலியான கையொப்பம் மற்றும் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி மோசடி செய்த சந்தேகநபருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குருணாகலைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கடந்த புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை (04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இன்று (08) விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
சில மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக ஜனாதிபதியின் பெயர், போலியாக தயாரித்த கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்துவருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய நபர்கள் சில அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று சில பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அழுத்தங்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே செய்யப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவது குறித்து தனது பதவிக் காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும், சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகள் சட்டத்திற்கு அமைவாக, பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறை செயற்பட வேண்டும் என்பதும் ஜனாதிபதியின் கருத்தாகும் என செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
எனவே எவரேனும் ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி அழுத்தங்களை மேற்கொள்வார்களேயானால் அது பற்றி உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலே (பணிப்பாளர் நாயகம், உள்ளக நிர்வாகம்) அவர்களுக்கு 0112354479 / 0112354354 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு ஜனாதிபதி அலுலவலகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment