(எம்.எப்.எம்.பஸீர்)
தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 294 பேர், அக்கட்சியிலிருந்து அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவினை அமுல் செய்வதை தடுத்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்துள்ள மனுவினை எதிர்வரும் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி அமாலி ரண வீர நேற்று உத்தரவிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரை பிரதிவவாதிகளாக பெயரிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தாக்கல் செய்த மனு நேற்று பரிசீலனைக்கு வந்த போதே நீதிபதி மேற்படி அறிவித்தலை விடுத்தார்.
குறித்த மனுவில், தான் உள்ளிட்ட 294 பேரை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தியமையை குறித்த தீர்மானத்துக்கு தடைவிதிக்க கோரப்பட்டுள்ள நிலையில், அந்த மனு நேற்று பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது முறைப்பாட்டாளர் ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட் மன்றில் ஆஜரானார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலர் சார்பில் சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரனவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி நியோமால் பெல்பிட்ட மன்றில் பிரசன்னமானார்.
இந்நிலையில் குறித்த மனுவானது பரிசீலிக்கப்பட்டது. அதன்போது, மனுதாரர் கோருவதைப் போன்ற ஒரு தீர்மானத்துக்கு வர தன்னால் ஒரு பக்க நியாயத்தை மற்றும் பரிசீலிக்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதிபதி அமாலி ரணவீர, ஒரு பக்க நியாயத்தை மட்டும் கேட்டு முடிவொன்றினை எடுப்பதை நிராகரித்தார்.
அதன்படி இந்த மனுவினை எதிர்வரும் 15 ஆம் திகதி பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

No comments:
Post a Comment