(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 25 ஆயிரத்து 912 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி முதல் நேற்று முன்தினம் சனிக்கிழமை (20) நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த சுற்றிவளைப்புக்களின் போது போதைப் பொருளுடன் 6,420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 3,551 பேரிடமிருந்து 5 கிலோ 472 கிராம் 941 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
2609 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து 217 கிலோ 474 கிராம் 883 மில்லி கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 758 கிராம் 936 மில்லி கிராம் ஐஸ் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானத்துடன் 5574 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 782 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த 52 பேரும் வெடி மருந்துகளை வைத்திருந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 18 குழல் 12 ரக துப்பாக்கிகள், 24 கல்கட்டஸ் ரக துப்பாக்கிகள், 18 ரிபிடர் ரக துப்பாக்கிகள், 5 புதிய வகை துப்பாக்கிகள், பிஸ்டோல், 36 தன்னியக்க தோட்டாக்கள், மூன்று வாள்கள், கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
367 கிராம் தொகை வெடி மருந்து, 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 7 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவை மாத்திரமின்றி பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 5,110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கூறிய குற்றச் செயல்களுக்குள் உள்ளடங்காத வேறு வகையான குற்றச்செயல்களை புரிந்தமை தொடர்பிலும் 8,750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment