இலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

இலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி

இலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் முக்கியமானவராகக் கருதப்படும் கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி தனது எண்பதாவது வயதில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) சிறிது காலம் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அன்னார் நேற்று காலமானார்.

தென் மாகாணத்தின் மாத்தறை நகரில் 1940 இல் ஜூன் மாதம் 24 ஆம் திகதி முகமது அலி ஆயிஷா பீபீ தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தென்னிலங்கையின் புகழ்பூத்த டாக்டர் எஸ்.எம். ஸலாஹுத்தீன் தம்பதியரின் ஏக புதல்வியான நுறுல் புஸ்ரா வை மணமுடித்து மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாவார்.

கலாநிதி ஷுக்ரி தனது ஆரம்ப கல்வியை மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டதன் பின்னர் இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டத்தை பெற்றுக் கொண்டார். 

பின்னர் இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் வித்தியாலய பல்கலைக்கழகத்தில் களனி வித்தியாலங்கார பல்கலைக்கழகத்திலும் விரிவுறையாளராக பணியாற்றினார். இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் அரபு இஸ்லாமிய வரலாற்றுத் துறை பகுதிகளில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணிபுரிந்தார்.

அக்காலகட்டத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் பேராதனை பல்கழகத்திலும் பேராசிரியர் எஸ்.ஐ. இமாம் பேராதனை களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது அவரது மாணவராக டாக்டர் ஷுக்ரி கல்வியை பெற்றுக் கொண்டதோடு அவர்களது காலத்தில் பல்கலைக்கழகங்களில் அவர்களின் கீழ் விரிவுரையாளராக சிறப்பாகப் பணி புரிந்துள்ளார்.

பின்னர் மர்ஹும் நளீம் ஹாஜியாரின் அழைப்பை ஏற்று ஜாமிஆ நளிமியாவை ஆரம்பிக்கும் பணிகளுக்கு உதவியதோடு அக்கலாபீடத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பணிப்பாளர் நாயகமாக திகழ்ந்து அக்கலாபீடத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மும்மொழி திறன்கொண்ட டாக்டர் ஷுக்ரி பல இஸ்லாமிய நூல்களையும் வரலாற்று பதிவுகளையும் தந்துள்ளார். ஜாமிஆ நளீமிய்யாவின் சஞ்சிகையான இஸ்லாமிய சிந்தனையின் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பொறுப்பை ஏற்று அதனை திறம்பட சமூகத்திற்கு தந்துள்ளார்.

உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பல்வேறு மாநாடுகளில் சிறப்பு பேச்சாளராகவும் கருத்தரங்குகளை வழி நடத்துபவராகவும் அளப்பரிய சேவை ஆற்றியுள்ள டாக்டர் ஷுக்ரி முஸ்லிம் சமூகத்தின் விழிப்புணர்வுக்காக பல்வேறு மாநாடுகளை கூட்டி கல்விமான்களையும் முஸ்லிம் தலைவர்களையும் கூட்டினைத்துச் செயற்பட்டார்.

அன்னாரின் ஜனாஸா நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு தெஹிவலை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதன் பின்னர் அவரது சொந்த ஊரான மாத்தறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 5:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தெஹிவளை பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜனாஸா தொழுகையின் போது அஷ்ஷேக் ஏ.சி. அகார் முஹம்மத் உருக்கமானதொரு பிரசங்கத்தை செய்தார். மட்டுப்படுத்தப்பட்ட அளவினரே ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர்கள் ரஊப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஏ.எச்.எம். பெளசி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவர் என்.எம். அமீன் உட்பட ஏராளமானோர் மருத்துவமனையிலும் தெஹிவளை பள்ளிவாசலிலும் கூடி மர்ஹூம் ஷுக்ரி அவர்களுக்கு பிரார்த்தனை செய்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அனுதாபச் செய்திகளை அனுப்பி இருந்தனர்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment