(நா.தனுஜா)
அரச செலவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு முரணான வகையில் கையளித்தல் மற்றும் கடன் பெறல் சந்தர்ப்பங்கள் தொடர்பில் விளக்கம் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கணக்காய்வாளர் நாயகத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கணக்காய்வாளர் நாயகம் டபிள்யு.பி.சி.விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கறது.
அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரச செலவுகளுக்கான அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு முரணான வகையில் கையளித்தல் மற்றும் கடன் பெறல் சந்தர்ப்பங்கள் தொடர்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
2020 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு பாராளுமன்றத்தினால் தேர்தலை அறிவிப்பது வரையான செலவுகள் மற்றும் யோசனையொன்று ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் யோசனையொன்றை செல்லுபடியற்றதாக்கும் அதிகாரம் திறைசேரி செயலாளருக்கு இல்லை. அதேபோன்று செலவுகளுக்குப் பொறுப்பான நியமனப் பரிந்துரையும் அரசியலமைப்பிற்கு முரணானதாகவே இடம்பெற்றுள்ளது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் கடன் பெறுவதற்காக பாராளுமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்ட காலப்பகுதி முடிவடைந்திருக்கிறது.
மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதியொன்று நிர்ணயிக்கப்படாத நிலையில், அரசியலமைப்பின் 150(3) ஆம் பிரிவை செயற்படுத்த முடியாது. எனவே ஏப்ரல் 30 ஆம் திகதியின் பின்னர் அரச செலவுகளை மேற்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அதிகாரம் இல்லாமல் போயுள்ளது.
கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் ஊடாக 721 பில்லியன் ரூபா கடன் பெறுவதற்கு அனுமதி பெறப்பட்டு, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எனினும் இக்காலப்பகுதியில் அரசாங்கம் 822 பில்லியன் ரூபா கடனைப் பெற்றிருக்கிறது. அதாவது அனுமதியளிக்கப்பட்ட தொகையை விடவும் அதிகளவில் கடன்பெறப்பட்டுள்ளது. இவை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment