(செ.தேன்மொழி)
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதன் நோக்கத்தில் அரசாங்கம் ஊரடங்கை அமுல்படுத்தி உண்மைத் தகவல்களை மறைத்து வருவதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி, வைரஸ் பரவலினால் ஏற்படும் நெருக்கடி நிலைமையை கருத்திற் கொள்ளாது தேர்தலை நடத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சியால் நாட்டில் பெரும் அனர்த்தம் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
சிறந்த ஆட்சியாளன் என ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பின்னாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய ஆட்சிக் காலத்தில் கைகோர்த்திருந்த மோசடிக்காகரர்களே இணைந்து கொண்டுள்ளதாகவும், மீண்டும் அதே மோசடியான ஆட்சியே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருந்ததை அறிந்திருந்தும் அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய முறையில் செயற்படாமையினால் இன்று முழு நாடும் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருகின்றது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமுல்படுத்திவிட்டு அரசாங்கம் உண்மை தகவல்களை மறைத்து வருகின்றது. இந்த காலப்பகுதிகளில் அரசாங்கம் அதற்கு சார்பான பிரசாரங்களை மேற்கொண்டு விட்டு, வைரஸ் பரவல் உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவே எமக்கு தோன்றுகின்றது.
வைத்திய நியுணர்களின் ஆலோசனைக்கமைய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா? அப்படி மேற்கொள்ளப்பட்டால் கடற்படையினருக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது? சில உயிரிழப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள போதிலும், அந்த சடலங்களை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யும் முறையிலேயே தகனம் செய்துள்ளனர். இது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் பத்திரிகைகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் சில செயற்படாமல் இருக்கின்றன. இதனால் உண்மை தகவல்கள் எதுவும் வெளிவருவதற்கான வாய்ப்பும் குறைவு.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் 80 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா? இவர்களுக்கான வருமானம் தொடர்பில் எந்த நடவடிக்கையாவது மேற்கொண்டுள்ளதா? 5000 ரூபாய் பணமும் 45 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட வில்லை.
இவை தொடர்பில் அக்கறை செலுத்தாமல், எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை கூட்டுமாறு அறிவித்து வருகின்ற போதிலும் அதனை செய்யாது, அலரி மாளிகைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து விருந்து வழங்குவதால் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா?
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் 6 மாத காலம் இருக்கும் நிலையில், வைரஸ் தொடர்பில் பெரும் அச்சுறுத்தல் நிலைமை தோற்றம் பெற்றிருந்த தருணத்தில் பாராளுமன்றத்தை களைத்து, இந்த நெருக்கடியின் மத்தியில் தேர்தலை நடத்த முயற்சிப்பதானது மரணத்தின் வாயிலை திறப்பதற்கு இணையாகும்.
No comments:
Post a Comment