இலங்கையில் கடும்போக்குவாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழி நடத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள செய்திகள் தொடர்பில் ஏமாற வேண்டாம் என, பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
சமூக ஊடக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், புலனாய்வு பிரிவினருக்கு இலங்கையில் கடும்போக்குவாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசின் கீழ் அனைத்து புலனாய்வுத் துறைகளும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன், அவை முழுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை பேணிய வகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிட்ட ஒரு சில இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரே ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், நூற்றுக் கணக்கானோர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையிலும் உள்நாட்டிலும் சர்வதேசரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் செயற்பாடுகளில் கடற்படையினர் முழுமையாக ஈடுபட்டுவருகின்றனர்.
அத்துடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய பயங்கரவாத செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸாதிக் ஷிஹான்
No comments:
Post a Comment