ஈரானுக்குள் அத்துமீறு நுழைவதை தடுக்க ஈரானிய எல்லைக் காவலர்கள் ஆப்கானியர்களை, சித்திரவதை செய்து ஆற்றுக்குள் வீசியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மேற்கு மாகாணத்தில் உள்ள ஒரு ஆற்றில் இருந்து குடியேறியவர்களின் உடல்களை மீட்டெடுக்கும் பணிகளை ஆப்கானிஸ்தான் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் மூத்த அதிகாரியொருவர், ஆப்கானின் ஹெராத் மாகாணத்தின் எல்லையிலிருந்து ஈரானுக்கு நுழைய முயன்ற சுமார் 70 ஆப்கானியர்கள் தாக்கப்பட்டு ஹரிருத் ஆற்றில் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
ஹரிருத் நதியானது ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பொதுவாக அமைந்துள்ளது.
இதேவேளை ஹெராத் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் இதுவரை ஐந்து ஆப்கானிஸ்தானியர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஐந்து சடலங்களில் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை தெளிவாகியுள்ளதாகவும் ஹெரத் மாவட்ட மருத்துவமனையின் தலைவர் அரேஃப் ஜலாலி சுட்டிக்காட்டினார்.
ஹெராத்தின் குல்ரான் மாவட்டத்தில் இருந்து தொழில் தேடி ஈரானுக்குள் செல்ல முயன்றபோது சனிக்கிழமை ஈரானிய எல்லைக் காவலர்களால் பிடிபட்ட 57 ஆப்கானிய பிரஜைகளில் ஒருவரான நூர் மொஹமட கூறுகையில், ஈரானிய காவலர்களிடம் நாங்கள் பிடிபட்டதன் பின்னர், அவர்கள் எங்களை சித்திரவதை செய்தனர். தொடர்ந்து ஈரானிய வீரர்கள் எங்கள் அனைவரையும் ஹரிருத் ஆற்றில் வீசினர் என்று அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ஈரானிய காவலர்களிடமிருந்து தப்பிய இன்னுமொரு ஆப்கானியரான ஷிர் ஆகா, ஈரானிய வீரர்களால் சித்திரவதை செய்து, ஆற்றில் வீசப்பட்ட 57 பேரில் குறைந்தது 23 பேர் இறந்துவிட்டதாகக் கூறினார்.
இந்நிலையில் ஹெராத்திலுள்ள ஈரானிய தூதரகம் சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டினை மறுத்துள்ளதுடன், ஈரானிய எல்லைக் காவலாளர்களினால் எந்த ஆப்கானிய குடிமக்களும் கைது செய்யப்படவில்லை என்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment