ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளரும், ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் நளீமிய்யா உருவாக்கத்துக்கு இணைந்து பணியாற்றியவருமான டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் இன்று (19.05.2020/செவ்வாய்க்கிழமை) வபாத்தானார். அன்னாரது மறைவானது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அன்னாரது இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்.
1940 - ஜூன்-24 இல் தென்மாகாணத்தின் மாத்தறையில் பிறந்த மர்ஹூம் சுக்ரி, ஜாமியா நளீமிய்யாவின் உருவாக்கத்துக்கு மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து பணியாற்றியவராவார். தனது கல்வியை கொழும்பு ஸாஹிராவிலும் , பேராதெனிய பல்கலைக்கழகத்திலும்,இங்கிலாந்து எடின்பரோவிலும் கற்றுத் தேர்ந்தார்.
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பிலான முக்கியமான விடயங்களை பொதிந்துள்ள பல நூல்களை இவர் உருவாக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட வேளைகளில் மிகவும் நிதானமாகவும், புத்திசாதுரியமாகவும் செயற்பட்டு தனது பங்களிப்புக்களை வழங்கியவர்.
ஜாமியா நளீமிய்யாவின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு வாழ்நாள் முழுவதும் தனது ஒட்டுமொத்த வகிபாகத்தினை நல்கியவர்.
புனிதம் மிக்க இந்த ரமலான் மாதத்தில் எம்மை விட்டும் மறைந்திருக்கிறார். அவரது மறைவினால் மனமுடைந்திருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு மன ஆறுதலையும், சகிப்புத் தன்மையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவதோடு, அன்னாரது பெறுமதிமிக்க சமூக கடமைகளை பொருந்திக்கொண்டு அன்னாருக்கு உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸினை வழங்கிட நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அலி ஸாஹிர் மௌலானா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment