ஐக்கிய தேசிய கட்சி நாடகமாடுகின்றது, ரணிலின் தலைமைத்துவத்தினை மக்கள் நிராகரிப்பர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 30, 2020

ஐக்கிய தேசிய கட்சி நாடகமாடுகின்றது, ரணிலின் தலைமைத்துவத்தினை மக்கள் நிராகரிப்பர்

(ஆர்.ராம்) 

பெரும்பான்மை அதிகாரமில்லாத செயற்குழுவைப் பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மக்களை திசை திருப்புவதற்காக ஐக்கிய தேசிய கட்சி நாடகமாடுகின்றது. அத்துடன் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தினை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 99 ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்முடிவு குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உருவாக்கத்திற்கான தீர்மானம் முறையாக மத்திய செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்டே எடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் சிலருடைய சுயலாப அரசியலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியானது கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டது. 

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுமார் இருபது பேர் வரையில் இருக்கின்றார்கள். அத்தகைய சொற்ப எண்ணிக்கையை கொண்டிருப்பவர்களை பயன்படுத்தி மத்திய செயற்குழுவில் தீர்மானங்களை எடுக்க முடியாது. 

மத்திய செயற்குழுவில் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கும் 69 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்கின்றார்கள். ஆகவே நடைமுறைச்சாத்தியமற்றதொரு விடயத்தினையே ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முன்னெடுத்து வருகின்றது. 

இதனை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் பேராதரவை திசைதிருப்பும் அரசியல் சூழ்ச்சியொன்றையே ஐக்கிய தேசியக் கட்சி செய்கின்றது. இந்த சூழ்சியை மக்கள் நன்கு அறிவார்கள். 

நடைபெறவுள்ள தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்தவத்தினை அவர்கள் நிச்சியமாக நிராகரிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. 

மேலும் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி அமைதியாக இருந்தது. தற்போது அவர்களால் எவ்வாறு அவை முரணானது என்பது பற்றி பேச முடிகின்றது. ஆகவே இவையெல்லாம் தேர்தல் கால அரசியல் நாடகங்களே என்றார்.

No comments:

Post a Comment