மட்டக்களப்பில் சிறுவர் இல்லங்கள், விசேட தேவையுடையோர், முதியோர் இல்லங்களுக்கும் வறிய குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

மட்டக்களப்பில் சிறுவர் இல்லங்கள், விசேட தேவையுடையோர், முதியோர் இல்லங்களுக்கும் வறிய குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன

(எம்.பஹ்த் ஜுனைட்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினைத் தவிர்க்கும் முகமாக தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களுக்கும், மட்டகளப்பில் இயங்கி வரும் சிறுவர் இல்லங்கள், விசேட தேவையுடையோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குமாக அரசாங்கத்தின் வேண்டுகோளில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டலில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதற்கமைய இம்மாவட்டத்தில் மண்முனைவடக்கு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கரையோரப் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்கள் 250 இற்கும், மட்டக்களப்பில் இயங்கிவரும் உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்குமாக சுமார் 2இலட்சத்தி 65ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் இயங்கிவரும் அல்பஜ்ர் நலன்புரி அமைப்பு வழங்கியுள்ளது. 

இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் இன்று (01) மாவட்ட செயலகத்தில் வைத்து உதயம் விழிப்புலனற்றோர் சங்கம், ஓசானம் சிறுவர் இல்லம் ஆகியவற்றுக்குமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனைய 250 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் குறித்த பிரதேசங்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், அல்பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே. பழீலுல்றஹ்மான், செயலாளர், எம்.ஐ.எம். கமால்தீன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் உற்பட இல்லங்களின் பிரதிநிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

No comments:

Post a Comment