அரசாங்கத்திடம் முழுமையாக சரணாகதியடைந்து 'ஆமாம் சாமி' போடுவதற்கு மட்டுமே வாய்திறக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மலையக மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லை. இதன்காரணமாகவே நிவாரணங்கள் எதுவும் கிடைக்காதபோதிலும், கிடைத்துவிட்டது என்ற தொனியில் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று (03.04.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு நாடும் முடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பல நிவாரணத்திட்டங்களை ஜனாதிபதி அறிவித்தாலும் அவை நடைமுறையில் இல்லை. குறிப்பாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள்கூட மக்களுக்கு இன்னும் உரிய வகையில் கிடைக்கவில்லை. அதேபோல் மலையகத்தில் அரச இயந்திரம் திருப்திகரமாக இயங்கவில்லை. இதனால் எமது மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வு திட்டங்களையும் எமது தலைவர் மனோ கணேசன் முன்வைத்துள்ளார்.
மலையகத்தில் எல்லாமே சரியாக நடக்கிறது என அறிக்கைவிட்டு வந்ததரப்பு இதனால் கூட்டத்தில் விழிபிதுங்கி நின்றது.
"பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள், தினக்கூலிகள், சமுர்த்தி பெறுநர்கள் ஆகிய நான்கு பிரிவையும் அரசாங்கம் கவனிக்கிறது. இவர்களுக்கு அரச நிவாரணங்கள் முறையாக கிடைக்கின்றன." என்று இ.தொ.கா. பிரதிநிதி அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளார்.
மேற்படி தரப்புகளுக்கு நிவாரணங்கள் முறையாக கிடைக்காத நிலையில் சுய நல அரசியலுக்காக அவை கிடைக்கின்றன எனகூறி நெருக்கடியான சூழ்நிலையிலும் மலையக மக்களை அப்பட்டமாக இ.தொ.கா. காட்டிக்கொடுத்துள்ளது. மக்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை தமக்கு பதவிகள்தான் முக்கியம் என்பதற்காக 'ஆமாம் சாமி' போடுவதற்கு மட்டுமே வாய் திறக்கும் இ.தொ.காவின் முகத்திரை தற்போது கிழிந்துள்ளது.
எமது தலைவர் உட்பட நாம் களப்பணியில் ஈடுபட்டுவருகின்றோம். இருந்தாலும் அதனை வைத்து விளம்பர அரசியல் நடத்தவில்லை. ஆனால் சவக்காரத்தை கொடுத்துவிட்டு ஏதோ சாதனை படைத்துவிட்டதுபோல் சிலர் அறிக்கை விடுக்கின்றனர். " - என்றார்
No comments:
Post a Comment