பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் தாமாகவே மீள இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனாலேயே அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த இழுத்தடித்து வருவதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்கம் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றது. எனினும் ஊரடங்கு சட்டம் இன்றுவரை சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கம் இன்று வரை அமுல்படுத்தவில்லை.
அவ்வாறு அந்த சட்டமூலத்தை அமுல்படுத்தினால் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் தாமாகவே இயங்கும். இந்த அச்சம் காரணமாகவே கோட்டாபய அரசு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அஞ்சி வருகின்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தனிவதற்கு முன்பாகவே அரசாங்கம் பல இடங்களில் ஊரடங்கு சட்டத்தை பகுதியளவில் தளர்த்தியுள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயமாக கருத வேண்டும்.
ஏனெனில் சுகாதார அமைப்புக்கள் மருத்துவ சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தும் அரசாங்கம் அதனை கணக்கில் எடுக்காது தேர்தலை நடத்துவதுலேயே குறியாக இருக்கின்றது. அரசாங்கம் தாம் நினைத்தது போல் தேர்தலை நடத்தியேதீரும்.
அதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனினும் அந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மலையக மக்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதே கேள்விக் குறியாகும் என்றார்.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment