(இராஐதுரை ஹஷான்)
அரசியல் ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் நெருக்கடியினை ஏற்படுத்த எதிர்த்தரப்பினர் முயற்சிக்கின்றார்கள். பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்த்தரப்பினர் செயற்படுவது வெறுக்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் எந்த நாட்டு எதிர்க்கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படவில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தியுள்ளது. இச்சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அரசியல், அரசியலமைப்பு ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி மக்களை அரசாங்கத்துக்கு எதிராக தூண்டிவிடும் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு எதிர்த்தரப்பினர் வெறுக்கத்தக்க அரசியல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கின்றார்கள்.
கொரோனா வைரஸ் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் வழமைக்கு திரும்பும் என்றார்.
No comments:
Post a Comment