(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவை கிடையாது. பிற நாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கேள்விக்குற்படுத்தி எதிர்த்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிற நாடுகளில் கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு வருவதற்கு ஆரம்பத்தில் விருப்பம் தெரிவித்தவர்கள் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்நாடுகளில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பலர் நாட்டுக்கு வருவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் குறித்த நாட்டுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் சட்டத்திற்கு முரணாக வெளியிடங்களில் தொழில் புரியும் இலங்கையர்களை பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment