ஜனாதிபதிக்கு எதிர்தரப்பினர் அழுத்தம் கொடுப்பது தவறான செயற்பாடாகும் - நீதி அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

ஜனாதிபதிக்கு எதிர்தரப்பினர் அழுத்தம் கொடுப்பது தவறான செயற்பாடாகும் - நீதி அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

(இராஜதுரை ஹஷான்) 

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்டுவதற்கு எவரும் நீதிமன்றத்தை நாட முடியாது. இல்லாத அதிகாரத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதிக்கு எதிர்தரப்பினர் அழுத்தம் கொடுப்பது தவறான செயற்பாடாகும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஐக்கிய தேசிய கட்சியினர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பங்காளி கட்சிகள் அனைவரும் ஒன்றினைந்து ஜனாதிபதியிடம் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். பாராளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அரசியலமைப்பின் பிரகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. 

அவசரகாலச் சட்டம் இயற்றப்பட வேண்டுமாயின் மாத்திரமே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி கூட்ட முடியும். அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்படவில்லை. ஆகவே ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தை அவரால் செயற்படுத்த முடியாது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதி மீண்டும் கூட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு எவராலும் நீதிமன்றத்தையும் நாட முடியாது. 

நிதி தொடர்பான அதிகாரத்தை நாளை முதல் ஜனாதிபதி செயற்படுத்த முடியாது. என்று குறிப்பிடும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம். கொரோனா வைரஸ் பரவல் வெகுவிரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். 

சிறைக்கைதிகள் எவரும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை. சிறைச்சாலைக்குள் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 4 சிறைச்சாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நீதிமன்றத்தையும், சிறைச்சாலையையும் இலத்ரனியல் முறை ஊடாக தொடர்புபடுத்தி ஒருசில வழக்குகளை விசாரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார். 

No comments:

Post a Comment