பாராளுமன்றைக் கூட்டுவதா? இல்லையா ? என்பது குறித்து ஜனாதிபதி அரசியலமைப்பை மீறாத தீர்மானத்தை எடுப்பார் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

பாராளுமன்றைக் கூட்டுவதா? இல்லையா ? என்பது குறித்து ஜனாதிபதி அரசியலமைப்பை மீறாத தீர்மானத்தை எடுப்பார் - அமைச்சர் பந்துல

(ஆர்.யசி) 

பாராளுமன்றத்தை கூட்டுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி சட்டமா அதிபரிடம் ஆலோசனைகளை பெற்று அரசியல் அமைப்பினை மீறாத தீர்மானம் ஒன்றினை முன்னெடுப்பார், அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

தற்போது நிலவும் நெருக்கடி சூழ்நிலையை எவரும் தமக்கு சாதகமாக பயன்படுத்த அரசாங்கம் இடமளிக்காது எனவும் கூறினார். 

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்த கடிதம் ஒன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதை அடுத்து அரசங்கம் எவ்வாறான தீர்மானம் எடுக்க உத்தேசித்துள்ளது என வினவிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அரசாங்கதின் நிலைப்பாட்டை அவர் விபரிக்கையில், நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் சகல அரச செயற்பாடுகளும் தனித்தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது. 

ஒரு புறம் நாட்டின் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதற்கான மாற்று வேலைத்திட்டங்கள் மற்றும் தேசிய உற்பத்தியை பலப்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

அதேபோல் கொரோனா தொற்றினை முற்றாக நீக்க சுகாதார கட்டமைப்பை பலப்படுத்தி அவர்களின் ஆலோசனைகளுக்கு என்ற உடனடி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 

இந்நிலையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தை கூட்ட சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார். 

உண்மையில் பாராளுமன்றத்தை கூட்டுவது குறித்து எவரும் தனித்தனி தீர்மானம் எடுக்காது சட்ட ஆலோசனையை பெற்றுக் கொள்வதே சிறந்த தீர்மானமாகும். சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு ஜனாதிபதி தீர்மானம் ஒன்றினை முன்னெடுப்பார். அதற்கான நகர்வுகள் இப்போது முன்னெடுக்கப்படுகின்றது. 

அனைவரும் அரசியல் அமைப்பிற்கு கட்டுப்பட்ட நபர்கள் என்ற வகையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் சட்ட ஆலோசனைகளை பெற்று அரசியல் அமைப்பிற்கு அப்பால் செல்லாத விதத்தில் அரசாங்கம் செயற்படும். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. 

அதேபோல் இந்த சூழலை பயன்படுத்தி எவரும் தமக்கு சாதகமாக சூழ்நிலையை கையாள நினைத்தால் அதற்கும் அரசாங்கம் இடமளிக்காது. அரசியல் சுயலாபங்களை பெற்றுக்கொள்ள இது உரிய காலம் அல்ல எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment