கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் வியாழன் வரை ஊரடங்கு - அன்றையதினம் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீள அமுல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் வியாழன் வரை ஊரடங்கு - அன்றையதினம் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீள அமுல்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளதோடு, மீண்டும் வியாழக்கிழமை (09) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (06) திங்கள் முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment