எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் 2006 ஆம் ஆண்டு உயர் தர பழைய மாணவர்களினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு அதிகமாகக் கொண்ட 60 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதியும், முருங்கைக்கன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை, கூழாவடி, கோராவெளி, பூலாக்காடு, வடமுனை மற்றும் வாகனேரிப் பிரதேசங்களைச் சேர்ந்த தினக்கூலி வேலைக்குச் சென்று வருமானம் பெற்று வந்த குடும்பத்தினர் என்பதோடு, கொரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டினால் வருமானம் இழந்துள்ளவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதில் அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா, தேயிலை, கருவாடு, வெங்காயம், உப்பு, சவர்க்காரம் அடங்கலாக ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப்பொதியும், முருங்கைக் கன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர்.டி.எம்.சஞ்ஜீவினால் கொரோனா நோயின் ஆபத்து, அறிகுறிகள் மற்றும் அத்தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் வழிகளைத் தெளிவுபடுத்தியதோடு, வீணாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாமெனவும் மக்களுக்கு இறுக்கமான கோரிக்கையை முன்வைத்ததுடன, இந்நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லும் படியும் தெளிவூட்டினார்.
அத்தோடு, 2006 ஆம் ஆண்டு புனித மிக்கல் கல்லூரி மாணவர்கள் சார்பாக வீட்டுத் தோட்டத்தின் பயன்கள், செயல்முறை சம்பந்தமான அறிவுரைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் புரிந்து கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்தியதோடு, இனிவருங்காலங்களில் வாழ்க்கைச் செலவைக் குறைத்து ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
No comments:
Post a Comment