அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் வாரம் வரை 2,387 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 135 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இவை மாவட்டத்தில் உள்ள 14 அரிசி ஆலைகளிலும், 07 களஞ்சியசாலைகளிலும் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. நெல் குற்றுவதற்கான அனுமதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப் பெற்றதும் அது தொடர்பான மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் இம்முறை சிறுபோகத்தில் மாவட்டத்தில் மொத்தமாக 21,500 ஹெக்டயர் அளவில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அதற்காக, யூரியா 4,600 மெட்ரிக் தொன், டி.எஸ்.பி. 573 மெட்ரிக் தொன், எம்.ஓ.பி 1,220 மெட்ரிக் தொன் பசளைகள் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்தளவான உரங்களே கையிருப்பில் காணப்படுவதாகவும் தேவையான விவசாயிகள் உரிய கமநல சேவைகள் நிலையம் மூலம் அதனைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் செளபாக்யா திட்டத்தின் மூலம் இதுவரை 4,000 விவசாயிகளுக்கு பயிர் கன்று மற்றும் விதை பைக்கற்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தமது உணவுத்தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதுடன் தன்னிறைவுக்கு ஏதுவாக அமையும் என்று அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
(அப்துல்சலாம் யாசீம், அப்துல் ஹலீம்)
No comments:
Post a Comment