(ஆர்.விதுஷா)
இன, மத குல பேதங்களை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் இயலாமை தற்போது வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல நாட்டை முன்னேற்றகரமான பாதையில் இட்டு செல்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு அழைப்பு விடுத்த அவர் மேலும் கூறியதாவது, இனமத குல பேங்களை உண்டுபண்ணி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்பொழுது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து துறைகளும் பலவீனமடைந்துள்ளன.
எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களைக் கூட இந்த அரசாங்கத்தினால் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை.
எமது அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை பெற்றுக் கொடுத்ததுடன், சம்பள முரண்பாட்டுக்கு தீர்வாக அவர்களுக்கான சம்பள உயர்வையும் வழங்கியது. ஆயினும் இந்த அரசாங்கம் அந்த சம்பள உயர்வை இரத்து செய்துள்ளது.
அத்துடன், அபிவிருத்தி திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்தியுள்ளது, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி இந்த அரசாங்கம் வேறுப்பட்ட கோணத்தில் பயணிக்கின்றது.
ஆகவே, நாடு பயணிக்கும் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment