வட மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரும்வரை விடுமுறையளிக்குமாறு வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபத்தில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு வட மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வட மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடைமுறைப்படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வட மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார் என்றுள்ளது.
No comments:
Post a Comment