(நா.தனுஜா)
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதுடன், அவர்களின் குடும்பங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கட்டிருக்கின்றன. எமது நாடும் இதிலிருந்து மீள்வதற்கு பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கையர் என்ற வகையில் இத்தாலி, தென்கொரியா, ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய உலக நாடுகளில் வாழும் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
முதலாவதாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துபவர்கள் அவர்களேயாவர். அடுத்ததாக அவர்கள் எமது நாட்டின் பிரஜைகள், மிகுந்த கவலைக்கு மத்தியிலேயே அவர்கள் தமது நேசத்திற்குரியவர்களை விட்டுப் பிரிந்து இருக்கிறார்கள்.
எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், தைரியம், தன்னம்பிக்கை என்பவற்றை மேலும் வலுப்படுத்துவதும், அவர்களது சுகாதார நலன் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் குறித்து அவதானம் செலுத்துவதும் முக்கியமானதாகும். அதனை முன்நிறுத்தி இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.
ஆகவே அவர்கள் தொடர்பில் வெளிவிவகர அமைச்சு விசேட செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதுடன் அவர்களின் குடும்பங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். குறித்த நாடுகளுடன் நெருங்கிய இராஜதந்திர உடன்பாடுகள் மூலம் அவர்களைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும்.
No comments:
Post a Comment