கொரோனா வைரஸ் பரவல் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை! - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

கொரோனா வைரஸ் பரவல் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

(ஆர்.விதுஷா) 

இலங்கை பிரஜை இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் தொற்று பரவலடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. ஆகவே, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கேயின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா (கொவிட் -19) வைரசினை உலகளாவிய ரீதியில் பரவலடையும் வைரஸ் என்று அறிவித்துள்ளது.

இதுவரையில், 114 நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காயிரம் பேர் மரணித்துள்ளதுடன், மரணிப்பவர்களின் வீதம் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இந்த கொரோனா வைரஸ் முதலில் பரவலடைந்த சீனாவின் வூஹான் மாநிலம் தொடக்கம் ஏனைய மாகாணங்களிலும், தற்போது வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தாலி மற்றும் ஈரான், தென்கொரியா, ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது. 

இதற்கமைய இலங்கை தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கை பிரஜை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், நோய்த் தொற்று பரவலடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில், அரச வைத்திய அதகாரிகள் சங்கம் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. 

கடந்த செவ்வாக்கிழமை இவ்விடயம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலை ஜனாதிபதியுடன் முன்னெடுத்திருந்தோம். அந்த சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பு நவடிக்கைளை முன்னெடுத்து செல்ல வேண்டும். நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளை அனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஊடக நிறுவன பிரதானிகளுடனான விசேட சந்திப்பினை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். 

அதற்கு மேலதிகமாக ஒருவேளை அவசர கால நிலைமை அறிவிக்கப்படுமாயின் அக்காலகட்டத்திற்கு தேவையான மருந்து மற்றும் சுகாதார வசதிகளை, களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருபவர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தல் மற்றும் நோய்க்காரணிகளை கண்டுபிடிக்கும் இயந்திர வசதிகளை பொதுமக்கள் இலகுவில் பயன்படுத்தும் வகையில் செயற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தோம். 

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்கும், மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு, அரசாங்க மருத்துவ சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.

No comments:

Post a Comment