கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர தயார் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர தயார்

பாறுக் ஷிஹான்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை குறிக்கோளாக கொண்டு கடந்த காலம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றிய தலைவர் ஸ்ரீ.க.கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (16) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்த உண்ணாவிரதி நான். அந்த வகையில் நாங்கள் போராட்டத்தை கைவிடும்போது எங்களை நாடி வந்த பல அரசியல்வாதிகள் பிரமுகர்கள் அனைவரும் எமக்கு பல வாக்குறுதிகளை தந்திருந்தனர். அதிலும் வந்தவர்கள் இவ்விடயத்தில் தங்கள் பதவியைக் கூட துறப்பேன் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அவ்வாறான ஒரு விடயம் நடைபெறவில்லை. ஏன் இதுவரை அவர்கள் பதவியை துறக்க வில்லை? ஏன் இதுவரை அவர்கள் உரிய தீர்வை பெற போராடவில்லை? என்பது இன்னும் புதிராகவே உள்ளது.

மேலும் எங்களோடு இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் முன்னெடுப்போம் என்று சொன்ன அரசியல்வாதிகள் கூட என்று மக்கள் மத்தியிலே தேர்தல் காலம் என்ற படியினால் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கினர்.எனவே இவ்வாறான பொய்யான அரசியல்வாதிகளின் பொய்யான செயற்பாடுகளை இனங்காண வேண்டும். அதாவது அரசியல் தரகு வியாபாரம் செய்பவர்கள் அரசியல் வியாபாரிகள் இவ்வாறு அரசியல் வியாபாரம் செய்கின்ற அரசியல்வாதிகளை ஓரம்கட்ட வேண்டும் .

மக்கள் உண்மையான ஒரு தலைவரை உண்மையான தலைமைத்துவத்திற்கு கீழ் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் ஒரு பெரிய சக்தியாக திகழ வேண்டும். அந்த மக்கள் சக்தியாக திகழும் பொழுது தான் நாங்கள் எங்களுடைய மக்களுக்கு உரிய உரிமைகளை அரசிடமிருந்து மீட்டெடுக்க முடியும். உண்ணாவிரதத்தை தளத்திற்கு வருகை தந்த மதகுருவான கலகொட அத்தே ஞானசார தேர் கொடுத்த வாக்குறுதியை நம்பி உண்ணாவிரதப் போராட்டத்தை தளர்த்தினோம் ஆனால் அவரது வாக்குறுதியும் பொய்த்து போனது.

அதேபோன்று தான் அரசியல் பிரமுகர்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் பொய்த்துப்போயுள்ளன இன்று எங்களுடைய மக்கள் மத்தியிலும் உண்ணாவிரதம் இருந்த என் மனதிற்கும் ஏமாற்றங்கள் கிடைத்தமை மிகவும் ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்பதை கூறிக் கொள்ள வேண்டும்.

எனினும் கணக்காளர் ஒருவர் நியமிப்பத்ற்கான அதற்கான வேலைத் திட்டங்கள் நடந்துகொண்டிருந்தது.அதனை கண்ணுடாக காணக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் எவ்வாறு தான் அது மாயமாக மறைந்து விட்டது என்பதை அறியமுடியவில்லை. திரைமறைவில் ஏதோ நடந்தேறியிருக்கிறது.

ஆகவே தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவிட்டால் நான் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவும் தயங்க மாட்டேன் என தெரிவிக்க விரும்புகின்றேன். என கூறினார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு,கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு களமிருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment