(செ.தேன்மொழி)
குருணாகலை - கொக்கரெல்ல பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொக்கரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை - தம்புள்ளை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் கொக்கரல்ல வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ள அம்பியூலன்ஸ் வண்டி வீதியை விட்டுச்சென்று, தூண் ஒன்றில் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சாரதியும், சாரதியின் உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.
மெதகம - தெஹியத்தக்கண்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சாரதியின் உதவியாளர் பொல்கொல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment