கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கும் வகையில் தவறான தகவல்களை அல்லது வதந்திகளை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள தொலைபேசி சேவைகளை பயன்படுத்த வேண்டாமென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளான ஐந்து இலங்கைப் பிரஜைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இது குறித்த பல்வேறு பொய்யான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான பலர் நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து தகவல் தொடர்பாடல் சேவைகளின் ஊடாகப் பொய்யானதும், திரிபுபடுத்தப்பட்டதுமான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் இலங்கைத் தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment