கொரோனா தொடர்பில் தேவையற்ற பயங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை! - மருத்துவர் மன்றத்தின் விசேட அறிவிப்பு! - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

கொரோனா தொடர்பில் தேவையற்ற பயங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை! - மருத்துவர் மன்றத்தின் விசேட அறிவிப்பு!

கொரோனா தொற்று நோய் தொடர்பான தேவையற்ற பயங்களைத் தவிர்த்து சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றின் இந்த சவாலை இலகுவாக வெற்றிகொள்ளலாம் என வட மாகாண மருத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு வடமாகாண மருத்துவ மன்றம் இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பல உலக நாடுகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில் தற்போது எமது நாட்டிலும் தொற்றுகள் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்புக்கள் பெருமளவில் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு அனைத்துத் தரப்புக்களினதும் பங்களிப்பு மிக அவசியமானது.

தொற்று நோய் தொடர்பான தேவையற்ற பயங்களைத் தவிர்த்து சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றின் இந்த சவாலை இவகுவாக வெற்றிகொள்ளலாம்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படினும் பயம் கொள்ள தேவையில்லை. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெறப்படின் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

தொற்று நோய்க் கட்டுப்பாட்டினை திறம்பட மேற்கொள்ள பொதுமக்கள் அனைவரது பங்களிப்பினையும் வேண்டி நிற்கிறோம்.

குறிப்பாக வடமாகாணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல உலக நாடுகளிலிருந்தும் பெருமளவானோர் வருகை தருகிறார்கள்.

எனவே தடுப்பு நடவடிக்கைகளை தகுந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் ஆனது தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வெளிவரும் சுவாச நீர்துளிகள் மூலமோ அல்லது தொற்று உள்ள ஒருவர் கையாண்ட பொருட்கள், மேற்பரப்புக்களைத் தொடும் போதோ பரவலடைகிறது.

நோய் தொற்று ஏற்பட்டால் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்

• காய்ச்சல்

• இருமல்

• தொண்டை நோ

• சுவாசிப்பதில் கஸ்டம்

• உடல்,தசை நோ

• வயிற்றோட்டம், உணவு தொகுதி தொடர்பான அறிகுறிகள்

ஒவ்வொருவரும் தனிநபர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து தனக்கு தொற்றுக்கள் ஏற்படாமலும் தொற்று ஏற்பட்டவர் தன்னிடமிருந்து மற்றவருக்கு தொற்றுதலடையாமலுமிருக்க பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

• சன நடமாட்டமுள்ள இடங்களை முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும்.

• ஓடும் நீரில் சவர்காரமிட்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

• ஒருவரிடம் கதைக்கும் போது குறைந்தது 3 மீற்றர் இடைவெளி பேண வேண்டும்.

• இருமும் போதும் தும்மும் போதும் அகற்றக் கூடிய கைக்குட்டை அல்லது ரிசூவினை பாவிக்க வேண்டும் அல்லது முழங்கையினை மடித்து முகத்தினை மூடுதல்.(அந்த கைக்குட்டை அல்லது ரிசூவினை சரியான முறையில் அகற்ற வேண்டும்)

• தொற்றுக்கான அறிகுறிகள் தென்படின் சுகாதார பகுதியினருக்கு தெரியப்படுத்தி சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்வதுடன் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இந்த தொற்றினால் ஆதிக ஆபத்தினை ஏதிர்கொள்ள கூடியவர்களான முதியோர், கர்பிணித்தாய்மார்கள், குழந்தைகள், நீண்டகால நோய்களை உடையோர், நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளோர் அவதானமாக இருப்பதுடன் கட்டாயமாக மேற்குறிப்பிட்ட விடயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

தேவையற்ற பயங்களை களைந்து தொற்று பரவுதலை தடுக்கும் நடவடிக்கைகளை சரிவர பின்பற்றி இந்த கொரோனா வைரஸ் தொற்று சவாலை எதிர்கொள்ள அனைவரது பங்களிப்பினையும் வழங்க வேண்டும் என வடமாகாண மருத்துவர் மன்றம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment