மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் மூடப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகள் ஓய்வெடுக்கும் அறையாக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
இந்நிலையில் நேற்றைய தினம் (02) கடற்படை அதிகாரியான T.Z. Bagus என்பவரின் ஜனாஸாத் தொழுகை, மையவாடிக்கு அருகில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள றாகமையிலிருக்கும் மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஜும்ஆ மஸ்ஜித் கட்டிடத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலானது சுமார் 100 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் தனவந்தர் ஒருவரால் வக்ப் செய்யப்பட்ட காணியிலேயே பள்ளிவாசல் இயங்கி வந்துள்ளது. றாகமை பிரதேச முஸ்லிம்கள் இதனையே தமது தொழுகைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் இப்பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக மக்கள் வருவதை தடை செய்துள்ளனர். மற்றும் பள்ளிவாசலை சுத்தம் செய்யவோ அல்லது பொருட்களை எடுப்பதற்கோ கூட எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை.
றாகமையின் அண்மைய ஜனாஸா நிகழ்வுகளுக்குக் கூட தேவையான கழுவும் கட்டில், சந்தக்கு போன்றவற்றை மாபோல பள்ளிவாசலில் இருந்தே பெற்றுக்கொண்டதுடன், ஜனாஸா தொழுகைகள் கூட மையவாடிக்கு அருகிலிருக்கும் பழைய வீட்டிலேயே தொழுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பள்ளிவாசல் கட்டிடம், அண்மையில் சிறைச்சாலை அதிகாரிகளால் புனரமைக்கப்பட்டு ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
No comments:
Post a Comment