மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பானது கொரோனா திரைமறைவில் அரங்கேறிய இழிசெயல் - ஐங்கரநேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பானது கொரோனா திரைமறைவில் அரங்கேறிய இழிசெயல் - ஐங்கரநேசன்

(எம்.நியூட்டன்) 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மிருசுவிலில் எட்டு அப்பாவித் தமிழர்களை கொன்று மலக்குழியில் புதைத்த கொலையாளிச் சிப்பாய் சுனில் இரத்நாயக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்கிப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். உலகமே கொரோனாப் பீதியிலும் ஊரடங்கு அமைதியிலும் உறைந்து கிடக்கும் நேரம் பார்த்து, கொரோனா திரைமறைவில் கோத்தாபய ராஜபக்ஷ இந்த இழிசெயலை அரங்கேற்றியுள்ளார் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

மிருசுவில் படுகொலைக் குற்றவாளி கோப்ரல் சுனில் இரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருப்பது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் அதனைத் தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிருசுவில் படுகொலையாளிக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை இலங்கையில் நீதித்துறையின் உச்ச அமைப்பான உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி இச்சிப்பாயை விடுதலை செய்திருப்பதன் மூலம் நிதித்துறையின் மாண்பையே கேலிக்கு ஆளாக்கியுள்ளார். 

தமிழின அழிப்புக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்று பல தரப்பும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நீதிமன்றில் அடையாளம் காணப்பட்ட போர்க் குற்றவாளியை ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். இதன் மூலம் இராணுவம் தொடர்பான உள்ளக விசாரணைக்கோ அல்லது சர்வதேச விசாரணைக்கோ இலங்கையில் இடமேயில்லை என்று ஜனாதிபதி தெட்டத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். 

சோறு கொடுத்தவர்கள், தங்க இடம் கொடுத்தவர்கள் போன்ற அற்ப காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாத ஜனாதிபதி, தனது இரத்தம் என்ற ஒரே காரணத்துக்காக படுகொலை புரிந்த சிப்பாயை விடுதலை செய்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி தமிழ் மக்கள் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதையும் சிங்கள மக்களுக்கான அதிபரே தான் என்பதையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார். 

கொரோனா, கடற்கோள் போன்ற பேரிடர் காலங்களில் படையினரை அவசர பணிகளில் ஈடுபடுத்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாயினும், ஜனாதிபதி சாதாரண சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலே படையினரை உள்வாங்கி வருவதோடு, இப்போது உச்சமாக மரண தண்டனை சிப்பாய்க்கு விடுதலையும் வழங்கியுள்ளார். இதன் மூலம் ஜனநாயகப் பலத்தைவிட இராணுவப் பலத்தையே தனது ஆட்சித் துணையாக நம்புகிறார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலின்போது இனவாதத்தை கக்கி வெற்றியை பெற்ற கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களை கொன்ற சிப்பாயைச் சிறை மீட்டவர் என்ற பிம்பம் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றியை பெற்றுத் தரக்கூடும். ஆனால், பதவியேற்றது முதல் ஜனாதிபதி தமிழ் மக்கள் தொடர்பாக எடுத்துவரும் நிலைப்பாடுகள் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஒருபோதும் ஐக்கியபட முடியாதவாறே துருவப்படுத்தி வருகின்றன. 

ஜனாதிபதி தன்னைச் சிங்கள மக்களுக்கான ஜனாதிபதியாக வெளிப்படையாகவே அடையாளப்படுத்தி வருகின்றபோது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள இயலாது என்பது வெள்ளிடைமலை இந்நிலையில், விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று சொல்லி இனவழிப்பு போரை முன்னெடுத்த அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்த வல்லாதிக்க சக்திகளே இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் இருப்புக்கான அரசியல் உத்தரவாதத்தையும் வழங்க வேண்டும் என்றுள்ளது.

No comments:

Post a Comment