ஈரானில் கொரோனா தாக்கத்துக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

ஈரானில் கொரோனா தாக்கத்துக்கு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் நாட்டில் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் மற்ற மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளாவிய அளவில் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக தற்போது உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கொரோனா தாக்கத்தால் சீனாவில் மட்டும் 3,136 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 350 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

உலகளாவிய அளவில் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மூன்றே மாதங்களுக்குள் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை இந்த கொடிய ஆட்கொல்லி வைரஸ் கொன்று குவித்துள்ளது.

ஈரான் நாட்டில் அமைச்சர்கள் உட்பட சில முக்கிய பிரமுகர்கள் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில் பல அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பொதுமக்களிடையே கடும் பீதி நிலவி வருகிறது.

ஈரானில் மட்டும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 54 பேர் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்ததாகவும் இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஈரான் அரசின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் கியானோஷ் ஜஹான்போர் இன்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment