கொலம்பியாவின் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் உள்ள சிறையிலேயே இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக சிறைக் கைதிகள் சுகாதாரமான இடங்கள் தங்களிற்கு அவசியம் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலைக்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதையும் காயமடைந்தவர்களையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வைரசிற்கு மத்தியில் நாங்கள் நாய்கள் போல கைவிடப்பட்டுள்ளோம் என சிறையில் உள்ள ஒருவர் தெரிவிப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கொலம்பியா முழுவதும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இது சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினையல்ல என தெரிவித்துள்ள கொலம்பியாவின் சுகாதார துறை அமைச்சர் எந்த கைதியும் தொற்றிற்குள்ளாகவில்லை, அதிகாரிகள் சிறைச்சாலை ஊழியர்கள் எவருக்கும் நோய் பாதிப்பில்லை என தெரிவித்துள்ளார்.
கொலம்பியா செவ்வாய்க்கிழமை முதல் முடக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த வன்முறைகள் வெடித்துள்ளன.
இதேவேளை வன்முறைகள் உயிரிழப்புகள் குறித்த செய்திகள் வெளியானதும் சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தவர்கள் பலர் சிறைக்கு வெளியே பதட்டத்துடன் குழுமியுள்ளனர்.
இந்த நிமிடத்தில் யார் உயிருடன் உள்ளார் யார் கொல்லப்பட்டுள்ளார் என தெரியவில்லை என 23 யுவதியொருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment